ஐயா.. எல்லாமே நாசமா போச்சு.. மத்திய குழுவினரின் காலில் விழுந்து பெண்கள் கதறல்
ஆய்வு செய்ய வந்த குழுவினரிடம் பெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
புதுக்கோட்டை: ஐயா... எங்க வாழ்க்கையே நாசமா போச்சே" என்று ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரின் கால்களில் விழுந்து பெண்கள் கதறினர்.
கஜா புயலின் பாதிப்பு இன்னமும் டெல்டா வாசிகளை உலுக்கி எடுத்து வருகிறது. வீடு, நிலபுலன்கள், எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள் மக்கள். இதனால் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை நேரில் சந்தித்து புயல் பாதிப்பினை பற்றி விரிவாக எடுத்து கூறி, நிவாரண நிதியை கேட்டார்.
அத்துடன், மத்திய குழு ஒன்றையும் அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படியே மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தார்கள்.
[கஜா: மத்திய ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு.. தஞ்சையில் மக்கள் பெருந்திரளாக போராட்டம் ]
புதுக்கோட்டை
பிறகு முதல்வர், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பிறகு ஒவ்வொரு டெல்டா மாவட்ட பகுதிகளையும் ஆய்வு செய்ய முடிவு செய்தார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேற்று இந்த குழுவினர் காரில் வந்தனர். அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கலெக்டர் கணேஷ் என எல்லோரும் கூட வந்திருந்தார்கள்.
விஜயபாஸ்கர் விளக்கம்
குடிசைகள் கூரையின்றி கிடப்பதையும், மக்கள் வீடின்றி கிடப்பதையும் ஆய்வு குழு கண்ணால் பார்த்தது. ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி கிடப்பதையும் பார்த்தனர். குளத்தூர் அருந்ததியர் என்ற காலனிக்கு சென்ற குழுவினர் குடிசைகள் தரைமட்டமாகி உள்ளதை பார்த்து ஆய்வு செய்தனர். எப்படியெல்லாம் புயல் பாதித்துள்ளது என்பது பற்றி விஜயபாஸ்கர் அவர்களிடம் விளக்கி கொண்டிருந்தார்.
காலில் விழுந்தனர்
அந்த நேரம் பார்த்து, இடிந்த பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவினரை பார்த்ததும், அந்த பகுதியில் இருந்த பெண்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டனர். ஓடிவந்து அக்குழுவினரின் காலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்து விட்டார்கள்.
தண்ணி கூட இல்லை
"ஐயா.. எல்லாமே போச்சு ஐயா.. புயலால் எங்க வாழ்க்கையே நாசமா போச்சு.. இனிமே என்ன செய்ய போறோம் என்றே தெரியல.. தங்கறதுக்கு குடிசைகள் கூட இல்லை ஐயா.. நீங்கதான் ஒரு வழி சொல்லணும். கரண்ட் கூட இல்லை. 9 நாளாச்சு.... இருட்டிலதான் இருக்கோம். குடிக்க நல்ல தண்ணி கூட இல்லை ஐயா" என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.
கவலைப்படாதீங்க
பெண்கள் இப்படி காலை பிடித்துகொண்டு அழுவதை பார்த்ததும் மத்திய குழுவினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களை தூக்கி விட்டு, தோளில் தட்டிவிட்டு தேற்றினார்கள். பிறகு அந்த பெண்களிடம், "உங்களுக்கு என்ன பாதிப்பு இருக்குன்னு பாக்கறதுக்காகத்தான் நாங்க வந்திருக்கோம். யாருமே கவலைப்படாதீங்க.
அமைச்சர் ஆறுதல்
உங்களுக்கு என்ன நியாயமா கிடைக்குமோ அதை கண்டிப்பா செய்வோம்" என்று உறுதி கூறினார்கள். அப்போதும் பெண்கள் அழுது கொண்டே இருந்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரும், கலெக்டரும் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்றும்கூட அந்த பகுதியில் மத்திய குழுவினர் மேலும் ஆய்வு நடத்த இருக்கிறார்கள்.