அரசியலில் ரஜினியும், கமலும் எப்போது கைகோர்ப்பார்கள்…? கவிஞர் சினேகன் சூசக பதில்
புதுக்கோட்டை:நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தவுடன் அவருடன் மக்கள் நீதி மையம் கட்சி சேர்ந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய மாநில பொதுச் செயலாளர் கவிஞர் சினேகன் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்ய கட்சி மாவட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. அதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் சினேகன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கவிஞர் சினேகன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 11 மாத காலம் ஆகும் நிலையில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த மாதம் மக்கள் நீதி மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது.
அந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் எவ்வளவு நபர்கள் உறுப்பினராக உள்ளார்கள் என்பதை முறைப்படி அறிவிப்போம். ரஜினிகாந்தும் கமலும் இணைந்து அரசியல் களத்தில் நிற்பார்களா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்துடன் கமல் இணைவாரா என்பது குறித்து காலம்தான் முடிவு செய்யும். வருகின்ற லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடுவது உறுதி .
அது குறித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசன் ஒரு போதும் கொள்கை இல்லாத கட்சிகளோடு ஒன்றிணைய மாட்டார் என்று சினேகன் கூறினார்.