நடுரோட்டில் வெட்டிய கும்பல்... ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவுடி- புதுக்கோட்டையில் பயங்கரம்
துக்கோட்டையில் பிரபல ரவுடியை நடுரோட்டில் மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா சூட்டிங் போல நடந்த இந்த சம்பவம் புதுக்கோட்டை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை: வெள்ளிக்கிழமை விடிந்ததும் அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பார்ப்போம் என்று புதுக்கோட்டைவாசிகள் நினைத்திருக்க மாட்டார்கள். திருவப்பூர் பார்க்கில் நடைபயிற்சிக்காக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் காரணம் நடந்த சம்பவம் அப்படி. மோட்டார் பைக்கில் வந்த நபர்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஒரு நபரை ஓட ஓட வெட்டி சாய்த்தனர். அவரது நண்பரையும் வெட்டி ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுத்தான் சென்றது.
வெட்டிக்கொல்லப்பட்ட நபரின் பெயர் சுரேஷ் பாண்டி என்பதாகும். இவர் புதுக்கோட்டை கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு தொழிலே ரவுடித்தனம்தான். இவர் மீது இவர் மீது புதுக்கோட்டை திருநெல்வேலி கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக ஜெயிலில் இருந்த அவர் சமீபத்தில் வெளியே வந்துள்ளார். இன்று விடிந்த உடன் யார் முகத்தில் விழித்தாரோ, கடைசி சூரிய உதயம் இதுவாகத்தான் இருக்கும் என்று சுரேஷ் பாண்டிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
நடிகையை பார்ட்டிக்கு கூப்பிட்டு சீரழித்த இருவர் - மும்பையில் கொடூரம்
நடைபயிற்சிக்கு சென்ற ரவுடி
சுரேஷ் பாண்டி தனது நண்பர் ஆனந்துடன் இன்று காலை திருவப்பூர் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டீக்கடை ஒன்றில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சுரேஷ் பாண்டியையும் அவரது நண்பரையும் வழிமறித்து கையில் வைத்திருந்த கத்தி அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
அரிவாள் வெட்டு
நடந்த சம்பவத்தை உணரும் முன்பே சுரேஷை வெட்டி சாய்த்தனர். தடுக்கப் போன நண்பர் ஆனந்துக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு பல்வேறு திசைகளில் நோக்கி ஓடினர். இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்ததை பார்த்து விட்டுதான் தப்பிச்சென்றனர்.
அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
நடந்த சம்பவத்தால் அந்த பகுதியே அதிர்ச்சியில் உறைந்து போனது. சுதாரித்த சிலர் திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்த போது சுரேஷ் பாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரை விட்டிருந்தார் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை
அவருடைய நண்பரான ஆனந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடு ரோட்டில் ரவுடி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதற்காக கொலை
வந்தவர்கள் யார்? சுரேஷ் பாண்டியை கொன்றது ஏன் பழிக்குப் பழியால் நடந்த கொலையா என்று திருக்கோகரணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் வந்தவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தங்களுடைய முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.