விஷமத்தனமான வதந்தி.. ஒரே நேரத்தில் 10,000 பேர் குவிந்ததால்.. புதுக்கோட்டையில் பரபரப்பு
விவசாய கடன் என புதுக்கோட்டையில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
புதுக்கோட்டை: ஒரே நாளில்.. ஒரே சமயத்தில்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்ததால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கஜா புயல் பாதிப்பினால் ஏற்கனவே விவசாயிகள் இன்னலில் உள்ளனர். எந்த சலுகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு விவசாய கடனையாவது தள்ளுபடி செய்யுங்கள் என்று டெல்டா மக்கள் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில், ஆட்சியர் கணேசனிடம் மனு கொடுத்தால், கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று யாரோ ஒருவர் வதந்தியை கிளப்பிவிட, அது தீ போல மாவட்டம் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது.
10 ஆயிரம் பேர்
இதனால் பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்து வர ஆரம்பித்துவிட்டனர். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் சூழ்ந்துவிட்டனர்.
ரூ.5 முதல் ரூ.60 வரை
இதுதான் சமயம் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு ரூ.5 முதல் 60 ரூபாய் வரை விலையை வைத்து விற்பனையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
மக்கள் ஏமாற்றம்
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் மனுக்களை வாங்கப்பட்டு வருகிறது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆசை ஆசையாக மாவட்டம் முழுவதும் இருந்து திரண்டு வந்த மக்கள், பிறகு வதந்தி என்று கேள்விப்பட்டதும், ஏமாற்றம் அடைந்தனர்.
வதந்தி பரப்பியது யார்?
அதனால் கொண்டு வந்த மனுக்களை கொடுத்துவிட்டு வாடிய முகத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் ஒருசிலர் இப்படி வதந்தி பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொதித்து போய் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் இன்றைக்கு மாவட்ட மக்கள் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகமே திக்குமுக்காடிவிட்டது.