ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.. கோபப்பட்ட ஸ்டாலின்..யாரை எச்சரிக்கிறார்?
ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை: ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் கழக திமுக மூத்த நிர்வாகி காசி விஸ்வநாதன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசியதாவது, ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. திமுக எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கிறது. லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை சட்டசபை தேர்தலிலும் பெறுவோம், என்றுள்ளார்.
பெரியாரின் சிந்தனைகள் உள்ளவரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.. ஸ்டாலின் அதிரடி!
என்ன சர்ச்சை
அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக கட்சிக்குள் என்ன பிரச்சனை, அதன் தலைவர் ஸ்டாலின் எப்போதும் இல்லாத வகையில் இப்போது திடீர் என்று வெளிப்படையாக பேச என்ன காரணம் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக அறிவாலய வட்டாரம் சில முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கிறது.
எப்படி இருக்கிறது
அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தல் தோல்வி காரணமாக கடுமையான கோபத்தில் இருக்கிறார். திமுக கட்சியினர் சிலர் தேர்தல் நேரத்தில் சரியாக வேலைபார்க்கவில்லை. முக்கியமாக விக்கிரவாண்டி தொகுதியில் நிறைய பேர் வேலை பார்க்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள்.
விக்கிரவாண்டி போனது
விக்கிரவாண்டியில் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கட்சியினர் நினைத்த நிலையில், அங்கு திமுக மோசமாக தோல்வி அடைந்தது. இதற்கு கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது
இதை குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஸ்டாலின் இதில் கடுமையான கேள்விகளை எழுப்ப உள்ளார்.
என்ன பதவி
அதேபோல் திமுகவில் தற்போது பொருளாளர் பதவியை துரைமுருகன் வகித்து வருகிறார். அவரின் பதவி வேறு ஒரு சீனியருக்கு வழங்கப்பட உள்ளது. அதன்பின் துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட உள்ளது என்கிறார்கள். இது தொடர்பான ஆலோசனையும் திமுக கூட்டத்தில் நடக்க உள்ளது.அன்றே அறிவிப்பும் வெளியாகலாம்.
ஆனால் யார்
இந்த நிலையில் கட்சிக்குள் பதவிக்கு ஆசைப்பட்டு சிலர் உள்ளடி வேலைகளை செய்கிறார்கள். அவர்களை ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் கண்டிக்க இருக்கிறார். அதற்கு சின்ன டீசர்தான் இந்த புதுக்கோட்டை எச்சரிக்கை என்று அறிவாலயத்தில் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் யாரை இப்படி குறி வைக்கிறார் என்றுதான் தெரியவில்லை.