இங்க வருவீங்களா..சொல்லி சொல்லி.. இரும்பு கம்பிளால் மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்படை
புதுக்கோட்டை: இங்கு வருவீங்களா.. வருவீங்களா.. என்று சொல்லி, சொல்லி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரும்பு கம்பிகளால் தாக்கினர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினமும் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்து வருகிறார்கள். அப்படித்தான் கார்த்திக் (வயது 25), குட்டியாண்டி (25), ராசு (65), மனோகர், ஆனந்த் (48) ஆகிய 5 பேரும் இந்திய எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார்கள்.
அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அங்கு வந்தது. இதைப்பார்த்து மீனவர்கள் பீதியடைந்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.
ஆனால் மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுக்குள் தாவி குதித்தனர். அவர்களிம் இது எங்கள் நாட்டு எல்லை, நீங்கள் விதிகளை மீறி சர்வதேச எல்லையை தாண்டி வந்து ஏன் மீன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டு மரக் கட்டைகளாலும், இரும்பு கம்பிகளாலும் சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இரால் உள்ளிட்ட மீன்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் மீனவர்களின் வலைகளையும் அறுத்ததுடன். படகுகளையும் சேதப்படுத்திவிட்டு துரத்திவிட்டனர்
இதனால் வாழ்வாதாரததை இழந்த மீனவர்கள் 4 பேரும் படுகாயங்களுடன் சேதமடைந்த படகுடன் கரை சேர்ந்தனர். கரை சேர்ந்த அவர்களை மற்ற மீனவர்கள் மீட்டு மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக மீன்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். சில மாதங்களாக மீனவர்கள் மீதான தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீனவர்களை இலங்கை கடறப்டையினர் தாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.