பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள்..பாராட்டு விழா நடத்திய கலை இலக்கிய மன்றம்
புதுக்கோட்டை: அன்னவாசலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் இருவரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டு விழா நடத்தி பெருமைப்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் 4வது கூட்டம் கோகிலா பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் கே.ஆர்.தர்மராஜன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சோலச்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரவேற்புரை ஆற்றினார்.
அன்னவாசலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் எம்.ரோஜா மற்றும் பி.கவிபிரபா ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் திரு.என்.ஆர்.ஜீவானந்தம் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.
பாராட்டு விழாவில் பேசிய அவர் மாணவர்களின் வெற்றிக்கு பெரிதும் உழைத்த ஆசிரியர் பெருமக்களுக்கும், பெற்றோருக்கும் முதலில் மனம் நிறைந்த பாராட்டுகள். மாணவர்கள் இன்றைய சூழலில் கல்வியோடு, நடைமுறை அரசியலையும் உற்று நோக்க வேண்டும். வெறுமென பாடத்தை மட்டும் கற்றுக்கொள்வது சிறந்த கல்வியாக அமையாது.
மாணவர்கள் சமூக சிந்தனை உடையவர்களாகவும் மனித நேயமிக்கவர்களாகவும் வளர வேண்டும். பாடப் புத்தகத்தை கடந்து மற்ற இலக்கிய நூல்களையும் அறிவியல் சார்ந்த செய்திகளை வாசிப்பதிலும், கற்றுக்கொள்வதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்.
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உம்மோடு வளர்ந்திட வேண்டும் என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வைர வரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாணவர்கள் திகழ வேண்டும் என்று பேசினார்.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிக்குழு உறுப்பினர் தோழர் மு.மாதவன், தோழர் சோமையா, தோழர் ராஜேந்திரன், தோழர் விஜயரெங்கன் போன்றோர் மாணவர்களைப் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நினைவுப் பரிசுகளைப் பெற்றுக்கொண்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் இலுப்பூர் இயன்முறை மருத்துவர் எழுத்தாளர் கோவிந்தசாமி சமூக சிந்தனை மிக்கப் பாடலைப் பாடினார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் புரவலர் தோழர் மீரான்மொய்தீன் நன்றி கூறினார்.