பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் ரத்து .. கொதிக்கும் விவசாயிகள் சங்கம்
Recommended Video
புதுக்கோட்டை: மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்டது தவறானது என விவசாய சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் ஜிஎஸ் கணபதி புதுக்கோட்டையில் பேட்டியின் போது தெரிவித்தார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து ஜிஎஸ் கணபதி கூறியதாது: இந்திய அரசின் 2020-2021 நிதியாண்டுகான மத்திய பொது பட்ஜெட் இன்று சமர்ப்பிக்கப்பட்டது அதில் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. விவசாயத்துக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்டது தவறானது
அதில் விவசாய துறைக்கான கடந்த ஆண்டுகளில் எந்தெந்த இனங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்பதை தெளிவாக அறிவித்து வந்த நிலையில் இன்று சமர்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் கோடி என அறிவித்திருப்பது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.
நதிநீர் இணைப்பு பற்றி தெளிவான ஒரு பார்வை இல்லாத பட்ஜெட்டாக இது இருக்கிறது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் மானியத்துடன் வழங்கிவந்த கடனை குறைத்திருப்பது விவசாயத்தை அழிக்கும் செயல். இது விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்கின்ற துரோகம். மானியம் பற்றி எந்த தெளிவான பார்வையும் இல்லாமல் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.
புரிதல் தன்மையும் இந்த பட்ஜெட்டில் இல்லை. நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயம் பெருகும் என கூறி வந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதிலிருந்து விவசாயிகளுக்கு எந்தவித சலுகைகளும் எதிர்காலத்தில் கிடைக்காது போல் தோன்றுகிறது.
20 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார்கள் வழங்கப்படும் என அறிவித்திருப்பது மிகவும் குறைவானது. தமிழகத்தில் மட்டுமே 15 லட்சம் பேர் விவசாயத்திற்கான மின் இணைப்பு பெற காத்திருக்கிறார்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 20 லட்சம் என்பது மிக சொற்பமான இலக்கு. தண்ணீர் பற்றாக்குறை மிகுதியாக உள்ள தமிழக மாநிலம் போன்ற பல மாநிலங்கள் விவசாயிகளுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் பற்றியான பெருமையாக கூற எந்த விஷயமும் இல்லை. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு வஞ்சகத்தை ஏற்படுத்துகின்ற பட்ஜெட்" என்றார்.