மத்திய, மாநில அரசுகளே.. சிவகுமாரை பார்த்து கத்துக்கங்கப்பா!
விவசாயிகளின் டீ கடனை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர்
புதுக்கோட்டை: சூப்பர்ல... தன்னால என்ன முடியுமோ அந்த வகையில் உதவி இருக்கார் சிவகுமார்!
நவம்பர் மாசம் 15-ம் தேதி நடுராத்திரி வந்த கஜா புயலால் தென் தமிழகம் முற்றிலும் நாசம் ஆனது. நாகை அருகே கரையைக் கடந்தாலும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் சின்னாபின்னமானது.
இதையடுத்து ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கி, பாதிக்கப்பட்ட மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் விவசாயக் கடன், கல்விக்கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சிவக்குமார்
ஆனால் அரசுக்கு சொன்ன தள்ளுபடி சமாச்சாரத்தை ஒருவர் தன் விஷயத்தில் அமல்படுத்தி உள்ளார். அவர் ஒரு டீக்கடைக்காரர். நாகை மாவட்டம் பெருங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த இவரது பெயர் சிவகுமார். வம்பன் நான்கு ரோடு அருகே டீக்கடை வைத்துள்ளார்.
கணக்கு எழுதினார்
கஜா புயல் சமயத்தில், கிராம மக்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வந்தவர்களும் என நிறைய பேர் இவர் கடைக்கு வந்து டீ குடித்து விட்டு போய் இருக்கிறார்கள். குறிப்பாக வீடு வாசல் இழந்தவர்கள் சிவகுமார் கடையில் டீ சாப்பிட வரும்போது, "பணம் இல்லாட்டி என்ன, அப்பறமா குடுங்க. கணக்கில் வெச்சிக்கலாம், முதல்ல டீயை சாப்பிடுங்க" என்று சொன்னார்.
விவசாயிகள்
அதன்படி டீ குடித்தவர்கள், வடை சாப்பிட்டவர்களின் கணக்கையும் எழுதி வைத்தார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாது என்று சிவகுமாருக்கு தெரிந்துவிட்டது. அதற்காக விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு, ஏதாவது செய்ய நினைத்துதான் இப்படி ஒரு முடிவை அறிவித்துள்ளார்.
நோட்டீஸ் ஒட்டினார்
அதன்படி, 18.12.2018 வரை அந்த கடையில் டீ குடித்துவிட்டு, வடை சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் சென்றவர்களுக்கு அந்த கடன் தள்ளுபடி செயப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடை பலகையில் நோட்டீசாகவும் ஒட்டியுள்ளார்.
பாராட்டுக்கள்
பொதுவாக கிரமங்களில் உள்ளவர்களுக்கு டீக்கடையில் அக்கவுண்ட் இருக்கும்தான். அந்த அடிப்படையில்தான் மெய்யநாதன் கணக்கு எழுதி வைத்தார். ஆனால் இப்படி அனைவரின் கடன் கணக்கையும் தள்ளுபடி செய்திருப்பதற்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய மாநில அரசு
விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் டீ குடித்த கடனை கடைக்காரர் தானாகவே தள்ளுபடி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எளிய மக்களைப் பற்றி ஒரு சாதாரண மனிதரால் உணர்ந்ததைக்கூட மத்திய மாநில அரசுகள் உணரவில்லையே என்ற கேள்விகளும் மக்களிடையே எழுந்துள்ளது.