அநியாயம்டா.. யார்டா நீ.. ரோட்டில் ஒருத்தரை நிம்மதியா விடலை.. டிக்டாக் பைத்தியம்.. தூக்கி வந்த போலீஸ்
டிக்டாக் செய்து அச்சுறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்
புதுக்கோட்டை: "புடிங்க சார் அவனை... புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு இளைஞர் ஒருவரின் டிக்டாக் இம்சை எல்லைமீறிவிட்டது! டான்ஸ் ஆடி கொண்டே.. போற, வர்ற பெண்களின் இடுப்பில் ஒரு இடி இடிப்பார் இந்த இளைஞர்.. ரோட்டில் போகும் பாட்டியை கூட விட்டு வைப்பதில்லை... டான்ஸ் என்ற பெயரில் சேஷ்டைகளை செய்து, தொல்லை தந்தவரை கொத்தோடு தூக்கி கொண்டு போய்வைத்து விசாரித்து வருகிறார்கள் நம் போலீசார்!
எங்க பார்த்தாலும் டிக்டாக்.. எதிலயும் டிக்டாக்... எல்லாத்திலயும் டிக்டாக்.. எத்தனையே பேர் இதில் திறமைகளை வெளிப்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
ஆனால், திறமைகள் என்ற பெயரில் செய்யும் அராஜகம், அருவருக்கத்தக்க அசைவுகள் போன்றவை ஆபத்தில்தான் கொண்டுவந்து தள்ளுகின்றன.
கொரோனா பீதி ஓய்வதற்குள்.. பெங்களூரில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்.. 2000 பேரை பலிவாங்கிய கொடிய நோய்
ரவுடிகள்
ஹீரோ, ரவுடிகளாக தங்களை சித்தரித்து வீடியோ போட்டு, கடைசியில் போலீசாரையே நக்கல் செய்து டிக்டாக் போட்டவர் வரை இப்போதும் களி தின்று கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னொருத்தரும் கம்பி எண்ண ரெடியாகி வருகிறார்... புதுக்கோட்டையை சேர்ந்த இந்த இளைஞரின் வீடியோதான் படுபரபரப்பாக பேசப்பட்டு அதிர்ச்சியையும் தந்து வருகிறது. புதுக்காட்டை புது பஸ்டாண்ட், திருச்சி ரெயில்வே ஸ்டேஷன், இப்படி மக்கள் எங்கு அதிகமாக கூடுகிறார்களோ அங்கு சென்றுவிடுவார் இந்த இளைஞர்.
பெண்கள்
அதிலும் கல்லூரி, பள்ளி மாணவிகள் கண்ணில் பட்டுவிட்டால் இன்னும் குஷியாகிவிடுவார்.. பெரும்பாலும் இவரது டிக்டாக் எல்லாமே டான்ஸ் வீடியோக்கள்தான்.. கிராமப்புறம் என்றாலும் சரி, கூட்டமாகவும், பொதுமக்கள் நடமாடும்போது, யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென டான்ஸ் ஆடுவதும், அந்த பெண்களின் இடுப்பில் எதிர்பாராமல் போய் இடிப்பதும்தான் இவர் ஸ்பெஷாலிட்டி.. ரோட்டில் போகும் பாட்டியைகூட விட்டு வைக்க மாட்டார்.. அவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆடுவார்.
புகார்
தங்களை தொந்தரவு செய்து இளைஞர் அச்சுறுத்துவதாக பொதுமக்களே கொந்தளித்து புகார் தரும் அளவுக்கு போய்விட்டனர். 2 மாசமாகத்தான் இந்த அட்டகாசம் அதிகமாக இருந்திருக்கிறது.. இதனால் புதுக்கோட்டை எஸ்பியிடமே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் அளித்தனர்... அதன்பேரில் இந்த டிக்டாக் வீடியோ பதிவுகளை வைத்து அந்நபரை போலீசாரும் பிடித்துவிட்டனர்.
Recommended Video
விசாரணை
பெயர் கண்ணன், வயது 20 ஆகிறது.. ஆலங்குடி அருகே உள்ள, கருவடதெரு ராஜாகுடியிருப்பைச் சேர்ந்தவர்.. புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.. இவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெறும் டான்ஸ் ஆடியே பொதுமக்களை பயமுறுத்தி வந்துள்ளார் கண்ணன்.. அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டு சோஷியல் மீடியாவிலும் பதிவிடவும்தான் விஷயம் விபரீதமாகிவிட்டது. இப்போது, அவரிடம் விசாரணை முடிந்த பிறகே அவர் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிய வரும்.