விராலிமலையில் விஜயபாஸ்கர்... வீடு வீடாக சென்று கொரோனா நிவாரண நிதி உதவி
புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு சென்று கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
கொரோனா விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது முதல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னையில் முகாமிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தனது தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு நேற்றிரவு புறப்பட்டு வந்த அவர் இன்று காலை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கினார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட பணமில்லாமல் சிரமப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார்.
இதனிடையே விஜயபாஸ்கர் விராலிமலையில் இருந்தார் என்றால் அவருடன் ஒரு பெரும்படையே சுற்றி வரும். ஆனால் தற்போது சமூக விலகலை கடைபிடிப்பதை வலியுறுத்தும் வகையிலும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும் தன்னுடன் யாரும் வரக்கூடாது என கட்சியினருக்கு அன்புக்கட்டளை பிறப்பித்துவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். தனி ஆளாக பேரூராட்சி ஊழியர் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு நிவாரண உதவி வழங்க சென்றார்.
இந்தியாவில் கொரோனாவுக்கு 79 பேர் பலி- சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்
இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கை முழுவதுமாக அமல்படுத்துவது பற்றி கேட்டறிந்தார். பொதுவாக அமைச்சர்களை பொறுத்தவரை வாரத்தில் 5 நாட்கள் சென்னையில் இருந்தாலும் 2 நாட்கள் கட்டாயம் தொகுதிகளில் வலம் வருவர். ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையிலேயே விஜயபாஸ்கர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.