மது கிடைக்காத விரக்தி.. குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இரு மீனவர்கள் பலி
புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினத்தில் மது கிடைக்காத விரக்தியால் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இரு மீனவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து கடந்த 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 144 தடையுத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் குடிமகன்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் எதிரொலியாக புதுக்கோட்டையில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராஜா, அன்வர் ராஜா, அருண்பாண்டி ஆகியோர் ஆவர். இவர்கள் மூவரும் மது கிடைக்காத விரக்தியில் கடந்த 2 ஆம் தேதி போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்துள்ளனர்.
சென்னையில் 81 பேருக்கு கொரோனா.. எந்தெந்த ஏரியாக்களில் வைரஸ் பாதிப்பு.. முழு விவரம் இதோ..
இதையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ராஜாவும், அருண்பாண்டியும் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகிவிட்டனர். மற்றொரு மீனவரான அன்வர்ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.