செருப்பு.. மண்ணெண்ணெய் கேன்.. பாதி எரிந்த நிலையில் பெண் உடல்.. விராலிமலை அருகே பயங்கரம்!
பெண் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை: ஹைவே ரோட்டில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.. சடலத்துடன், சிதறி கிடந்த மண்ணெண்ணெய் கேன், செருப்பு, கம்மல் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பகுதி கலிங்கி.. இன்று காலை ஏழுமலை என்பவர் தன்னுடைய தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.. அப்போது, மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டார்.
இதனால், உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்தார்.. விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.. அந்த பெண்ணுக்கு 32 வயது இருக்கும்.. பாதி எரிந்த நிலையில் உடல் கிடந்தது.. உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், பாதி நிலையில் எரிந்த கால் செருப்பு, தோடு ஆகியவற்றை கைப்பற்றினர்.. சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பினர்.
பெண்ணை கொன்றது யார் என்று தெரியவில்லை.. அதனால் பூதகுடி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும், பாத்திமா நகர் பகுதி கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? கொலை செய்யப்பட்ட பெண் யார்? வேறு இடத்தில் கொலை செய்து சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றுள்ளனரா? என்ற விசாரணை நடந்து வருகிறது.