சீறிய காளைகள்… பாய்ந்த வீரர்கள்.. தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை:2019ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது, புதுக்கோட்டையில் தொடங்கியது. போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சொந்த பணத்தில் பரிசுகளை வழங்கினார்.
பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாட்டும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்திருந்தது. தமிழக மக்களின் வலிமையான போராட்டத்தால் தடைகளைத் தகர்த்தெறிந்த பின் 2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை, திண் டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது செய்யப் பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அதில் உளவு பிரிவு போலீஸார் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். பார்வையாளர்கள் மாடத்தில் போலீசாரும் இருக்க வேண்டும். சந்தேக நபர்களையும், மது அருந்தி வரும் நபர்களையும் உடனடியாகப் பிடித்து அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தமது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
முதல் ஜல்லிக்கட்டு போட்டி
இந் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. அதனை முன்னிட்டு, ஜல்லிக் ட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது 2019ம் ஆண்டு நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும்.
போட்டி தொடங்கி வைப்பு
போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 800 காளைகளும்,400 மாடுபிடி வீரர்களும் களமாடி வருகின்றனர். வீரர்களின் பிடிக்கு சிக்காமல் காளைகளும், சீறிவரும் காளைகளை அடக்க வீரர்களும் போட்டா போட்டி போட்டனர்.
மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள்
வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு அவர் சொந்த பணத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
நீதிமன்ற ஆணைப்படி போட்டி
அப்போது விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தற்போது பாதுகாப்பான விளையாட்டாக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதி மன்ற உத்தரவு மற்றும் விதிமுறைகளின்படி பாதுகாப்பான விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
உலக சாதனைக்காக போட்டி
விராலிமலையில் வரும் 20ம் தேதி உலக சாதனை படைப்பதற்காக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழு சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்படும்.
வீரர்களுக்கு காப்பீடு
இதேபோன்று மாவட்டத்தில் நடக்கும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் விழா குழு சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் பணிகள் துவங்கப்பட உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைவில் எடுக்கும் என்று அவர் கூறினார்.