அப்பாடா.. 9 நாள் கழித்து வெளிச்சத்தை பார்த்து துள்ளி குதித்த மக்கள்
9 நாள் கழித்து கரண்ட் வந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டை: 9 நாளைக்கு பிறகு கரண்ட் பார்த்ததும் மக்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்!! ஆனால் அந்த கரண்ட்கூட ஜெனரேட்டரால்தான் கிடைத்தது!!
கஜா சுழட்டி போட்டு சென்றுவிட்ட பிறகு டெல்டா மக்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவர்களுக்கு முக்கிய தேவையாக இருப்பது சாப்பாடும், கரண்ட்டும்தான்.
சுழட்டி அடித்த கஜாவால், கரண்ட் கம்பங்கள் வளைந்து நெளிந்து விழுந்தன.. கரண்ட் கம்பிகள் பூமியில் புதைந்து போய் கிடந்தன.. இதனால் இருட்டிலேயே மக்கள் தவித்தனர். குழந்தை குட்டிகளை வைத்து கொண்டு, கொசுக்கடியில் அவஸ்தை பட்டு வந்தனர்.
ஆய்வு செய்தனர்
இவர்களுக்கு பொதுமக்கள் நிவாரண உதவி பொருட்களுடன் மெழுகுவர்த்தியும், கொசுவர்த்தியும் சேகரித்து அனுப்பி வைத்து கொண்டே இருந்தார்கள். இந்த நிலையில், தான் நேற்று புதுக்கோட்டைக்கு மத்திய குழு ஆய்வு செய்ய வந்தது. பகலெல்லாம் ஆய்வு செய்த அந்த குழு வடகாடு பரமன் நகரில் ஆய்வு செய்ய போனார்கள்.
9 நாள் கழித்து வெளிச்சம்
ஆனால் அங்குதான் கரண்ட் இல்லையே. அதனால் அதிகாரிகள் பார்வையிடும் விதமாக ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. 9 நாள் கழித்து திடீரென கரண்ட் வெளிச்சம் வரவும் அந்த மக்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்! கிராமம் முழுசும் லைட்டுகள் எரிந்தன. பிறகு அக்குழுவானது, புயலால் சேதம் அடைந்த மரங்கள், வீடுகளை பார்வையிட்டனர்.
வெளிச்சம்
அப்போது குழுவினரை பார்த்ததும் கிராம மக்கள் அவர்களிடம் வந்துவிட்டனர், "ஐயா.. ஒரு வாரமா ரோட்டில்தான் நிற்கிறோம். எந்த நிவாரணமும் எங்களுக்கு வரலை. தண்ணி மட்டும்தான் கிடைக்கது. வேற எதுவுமே இல்லைங்க.. வாழ்க்கையே போச்சு. நீங்க வந்ததால்தானே இந்த வெளிச்சம்கூட இப்போது வந்திருக்கு நீங்க பகலில் வந்து இங்க நிலைமையை பாருங்க" என்று கண்ணீருடன் சொன்னார்கள்.
கண்டிப்பாக வருகிறோம்
அதனை கருணையுடன் கேட்ட மத்தியகுழு, கண்டிப்பாக வருகிறோம் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.