அடேங்கப்பா.. 1,353 காளைகள்.. கின்னஸ் சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு!
விராலிமலை: விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் தேர்வு குழு அறிவித்துள்ளது.
விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முதலில் கோவில் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டி உலகிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும்.
முதல்வர் தொடங்கி வைத்தனர்
அதிகமான பரிசுப் பொருள்களை வழங்க போகும் போட்டியாக இது திகழப்போகின்றது. இப்போட்டியை தமிழக முதல்வர் பழனிசாமி, தொடங்கி வைக்கின்றனர். முன்னதாக, வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். முதன்முறையாக பொதுமக்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பரிசு மழை
முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு சிப்ட் காரும் , 25 நபர்களுக்கு புல்லட் பைக்கும் வழப்பட உள்ளது. கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் தங்ககாசு, வெள்ளி காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், கிரைண்டர், ஏசி, மின்விசிறி, ஏர் கூலர் போன்ற எண்ணற்ற எலக்ட்ரானிக் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
பலர்
இந்த போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக தனி கேலரிகள் அமைக்கப்பட்டது. மேலும் இந்த போட்டி கின்னஸ் சாதனை செய்யப்படுவதால் மூன்று வெளிநாட்டு நடுவர்களும் பங்கேற்றனர்.
2000 காளைகள்
இதற்காக 2000 காளைகள் அழைத்து வரப்பட்டது. 800 க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றனர். போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்து குவிந்தர். திருச்சி சரக டி.ஐ.ஜி. தலைமையில் 4 மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி.க்கள், 25 டி.எஸ்.பி.க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முடியுமா
விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் தேர்வு குழு அறிவித்துள்ளது. ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் இத்தனை காளைகள் கலந்து கொண்டது இதுவே முதல்முறையாகும். 2000 காளைகளை திறக்க திட்டமிட்டு மொத்தம் 1353 காளைகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.