உண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர்
புனே: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்ற 30 வயது மருத்துவர் ஒருவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற சம்பவம் புனேயில் நடந்துள்ளது.
புனேயில் பார்வதி பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளவர் டாக்டர் ரஞ்சித் (30). இவருடைய மருத்துவமனையில் அங்குள்ள மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 71 வயது முதியவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்தியாவில் கொரோனாவிற்கு 34,63,973 பேர் பாதிப்பு - 26,48,999 பேர் மீண்டனர்
ஓட்டுநர்
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் வர இயலவில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்ஸை அழைத்தார். ஆனால் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் ரஞ்சித் மற்றொரு மருத்துவர் ராஜேந்திர ராஜ்புரோஹித் உதவியுடன் அவரே ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார்.
உயிரை காப்பாற்றிய மருத்துவர்
சில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இடம் இல்லாமல் போகவே ஒவ்வொரு மருத்துவமனையாக மாறி இறுதியில் ஒரு மருத்துவமனையில் இடம் இருந்ததால் அங்கு சேர்த்தனர். இதுகுறித்து அந்த முதியவரின் மகன் கூறுகையில் ரஞ்சித் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றது மட்டுமல்லாமல் எனது அப்பாவின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.
முதியவரின் மகன்
அது மட்டுமல்லாமல் எனது தந்தைக்காக மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி ஐசியூவில் படுக்கை காலியாக இருக்கிறதா என கேட்டுள்ளார். இவர்கள்தான் உண்மையான கொரோனா போராளிகள் என்றும் அந்த முதியவரின் மகன் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் டிரைவர்
இதுகுறித்து ரஞ்சித் கூறுகையில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஒரு முதியவரின் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த அளவில் இருந்தது. மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியதில் அந்த முதியவரை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றனர். அதன் பேரில் அவரை ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல முடிவு செய்த போது ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால் நானே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றேன் என்றார்.