புனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி!
புனே: புனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கொந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு 60 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சுற்றுச்சுவரை ஒட்டியபடியே குடியிருப்புக்குள் வாகனங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன.
சுற்றுச்சுவருக்கு வெளியே குடிசைப்பகுதி இருந்தது. இந்த குடிசைகளில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
பாய்ந்த கார்கள்
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி நீள சுற்றுச்சுவர் திடீரென சரிந்து குடிசைப்பகுதியில் விழுந்தது. இதனால் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சுவர் இடிந்து விழுந்த பகுதியில் சரிந்து பாய்ந்தன.
4 குழந்தைகளும் அடக்கம்
இந்த கோர விபத்தில் 15 பேர் பலியாயகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆண்கள், ஒரு பெண், 4 குழந்தைகள் என்பது உறுதியாகியுள்ளது.
பலர் உயிரிழந்திருக்கலாம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 60 அடி நீள சுவர் என்பதால் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகள் முடிந்தபின்னரே
ஆனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் முழு எண்ணிக்கையும் இதுவரை வெளியாகவில்லை. மீட்புப்பணிகள் முடிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என கூறப்படுகிறது.