இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள்.. சீனா திட்டம்.. அதிகாரி பகீர் தகவல்
புனே: இந்தியக் கடல் பகுதியில் சீனா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெற்கு பிராந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஏகே சாவ்லா தெரிவித்துள்ளார்.
புனே நகரில், சீனாவின் கடல் திட்டங்கள் என்ற பெயரிலான, கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏகே சாவ்லா பேசுகையில் கூறியதாவது:
மக்கள் புரட்சி ராணுவம் (PLA) என்ற பெயரிலான சீனாவின் கடற்படை 1985ஆம் ஆண்டு முதலே இந்திய கடல் பகுதியில் அவ்வப்போது நுழைந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு கடற் கொள்ளையை தடுப்பதற்காக ரோந்து என்ற பெயரில் தனது கப்பலை இங்கு அந்த ராணுவம் நிலைநிறுத்தியது.
நீல முகமூடி.. சிவப்பு சட்டை.. கையில் கத்தியுடன் மிரட்டிய மாணவி.. யார் இவர்? அதிர வைக்கும் தகவல்கள்!
நீர்மூழ்கி கப்பல்
இதன் பிறகு இதே காரணத்தை கூறிக்கொண்டு, அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களையும் நிலைநிறுத்தியது. 2012 ஆம் ஆண்டு உளவு தகவல்களை சேகரிக்க கூடிய கப்பல்களை இந்திய கடல்பகுதியில் நிறுத்தியது. சிக்னல்கள், எலக்ட்ரானிக் உளவுகள், மேப் போன்றவற்றை அந்தக் கப்பல்கள் சேகரித்தன.
விமானம் தாங்கி கப்பல்
வழக்கமான மற்றும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை இந்த பிராந்தியத்தில் 2013ஆம் ஆண்டு முதலே சீனா தொடர்ச்சியாக நிறுத்தி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது, விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்த பிராந்தியத்தில் வருங்காலங்களில் சீனா நிறுத்தக் கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீனா திட்டம்
சீனாவை பொறுத்த அளவில் இந்திய கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. கடல் சார்ந்த மற்றும் சாராத பல திட்டங்களை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் அந்த நாடு மேற்கொண்டு வருகிறது.
கடல் திட்டம்
இதன் மூலமாக இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் வங்கக்கடல் போன்ற பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.