இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்!!
புனே: ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகாவின் கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை புனேவில் இருக்கும் சசூன் பொது மருத்துவமனையில் சீரம் இன்ஸ்டிடியூட் இன்று நடத்தும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே பிடிசி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
புணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை
சசூன் மருத்துவமனை
இதுகுறித்து டாக்டர் முரளீதரர் டாம்பே அளித்து இருக்கும் பேட்டியில், ''திங்கள் கிழமை சசூன் மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் தடுப்பு ஊசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடக்கும். ஏற்கனவே பல்வேறு தன்னார்வலர்கள் இந்த பரிசோதனைக்கு தயாராக உள்ளனர். 150-200 வரையிலான தன்னார்வலர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
விருப்பம்
கடந்த சனிக்கிழமை முதல் தன்னார்வலர்களின் பெயர் சேர்க்கப்பட்டு வருகிறது. விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். புனேவில் இருக்கும் பாரதி வித்யாபீடம் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஇஎம் மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
ஆஸ்ட்ராஜெனிகா
பிரிட்டன்-ஸ்வீடன் பார்மா நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. நடப்பு மாதத்தின் துவக்கத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் அனுமதி அளித்து இருந்தது. சீரம் நிறுவனம் இந்த தடுப்பு ஊசியை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் மனித பரிசோதனை நடத்துவதற்கும் அனுமதி பெற்றுள்ளது.
அனுமதி
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இந்த தடுப்பு ஊசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி மறுத்து இருந்தது. மனித பரிசோதனையில் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டு இருந்த காரணத்தினால் தடை விதிக்கப்பட்டது.
நரம்பு
இதேபோல் பிரிட்டனிலும் ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டு இருந்தது. ஆனால், இது இந்த தடுப்பு ஊசியால் ஏற்பட்டதா அல்லது தடுப்பு ஊசி செலுத்தியதால் உடலில் இருந்த நோய் வெளியே தெரிந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருந்தது.
புனே ஆய்வு
இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று புனேவில் இந்த பரிசோதனை தொடங்கலாம் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.