கொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் விலை ரூ. 200 - சீரம் நிறுவனம் தகவல்
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் 200 ரூபாய் என சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.
புனே: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் 200 ரூபாய் மத்திய அரசுக்கு வழங்கப்படுவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட உள்ள நிலையில் ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை முதற்கட்டமாக கொள்முதல் செய்ய சீரம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 9 கோடி பேரை பாதித்துள்ளது. 7 கோடி பேர் வரை குணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒன்றே கால் கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இதைப்போல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை, உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான புனேயை சேர்ந்த சீரம் மருந்து நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது.
இந்த 2 நிறுவனங்களும் மேற்படி தடுப்பூசிகளை இந்தியாவில் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தின. இதில் நல்ல பலன்கள் விளைந்ததை தொடர்ந்து அவற்றை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஜி.சோமானி கடந்த 3ஆம் தேதி அனுமதி அளித்தார்.
இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை முதற்கட்டமாக கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு டோஸ் கோவிஷீல்டு மருந்து 200 ரூபாய்க்கு சலுகை விலையில் மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் வழங்குகிறது.
அதேசமயம், தனியார் சந்தைகளில் ஒரு தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கும் என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறியுள்ளார்.