கோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்
கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்து விநியோகம் புனே நகரில் இருந்து இன்று முதல் தொடங்குகிறது. விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
புனே: நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ள நிலையில் கோவிஷீல்டு மருந்து விநியோகம் இன்று முதல் புனே நகரில் இருந்து தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சீரம் நிறுவனம் மேற்கொண்டுள்ளனது. கோவிஷீல்டு மருந்துகளுக்கான கொள்முதல் ஆணையை மத்திய அரசிடம் இருந்து சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி சமீபத்தில் அளித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளது. வரும் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
கோவிஷீல்டு மருந்து இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக்தின் கண்டுபிடிப்பாகும். புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சீரம் நிறுவனம் மருந்துகளை சப்ளை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. இதற்காக சீரம் நிறுவனத்துடன் முதற்கட்டமாக 1 கோடி தடுப்பூசிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசுக்கும், சீரம் நிறுவனத்துக்கும் இடையே ஒரு டோஸ் 200 ரூபாய் என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் ஆணை சீரம் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதை அடுத்து புனேவில் உள்ள மருந்து குடோனில் இருந்து கோவிஷீல்டு மருந்துகளை மற்ற இடங்களுக்கு இன்று முதல் அனுப்பி வைக்கிறது.
கொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் விலை ரூ. 200 - சீரம் நிறுவனம் தகவல்
80 சதவிகித மருந்துகள் விமானம் மூலமே அனுப்பப்பட உள்ளது. குறுகிய தூர இடங்களுக்கு மட்டும் விசேஷ வேனில் அனுப்பி வைக்கின்றனர். மருந்துகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து அனுப்பப்படுகிறது. இதற்காக மும்பையை சேர்ந்த கூல் எக்ஸ் கோல்டு செயின் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
குடோனில் இருந்து மருந்துகளை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லப்படும். இன்று முதல் மருந்து சப்ளை தொடங்கும் என்று கூல் எக்ஸ் கோல்டு செயின் நிறுவனத்தின் அதிபர் ராகுல் அகர்வால் கூறியுள்ளார்.
முதலாவதாக 2 லட்சம் டோஸ் மருந்துகளை சப்ளை செய்வதற்கு சீரம் நிறுவனம் தயாராக வைத்துள்ளது. அவற்றை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரு வாரம் வரை ஆகும் என்றும் ராகுல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களில்.. 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி.. 3 கோடி பேருக்கு செலவை மத்திய அரசே ஏற்கும்- மோடி
சீரம் நிறுவனத்தின் குடோனில் இருந்து மருந்துகளை விமான நிலையம் கொண்டு செல்லும் வரை காவல்துறையினர் பாதுகாப்புடன் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றி இறக்குவதற்கு தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக விமானத்தில் ஏற்றி ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ஏற்பாடு செய்துள்ள குடோனில் அதை முதலில் வைக்கப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் வேறு குடோன்களுக்கு அனுப்பப்படும்.
இந்த மருந்தை பாட்டிலில் இருந்து திறந்ததும் 4 மணி நேரத்திற்குள் ஊசி போட்டுவிட வேண்டும். ஒரு பாட்டிலில் 10 பேருக்கான மருந்து இருக்கும். எனவே ஊசி போட 10 பேர் வந்ததற்கு பிறகுதான் பாட்டிலை திறந்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியதும் குடோன்களில் இருந்து மருந்து ஊசி போடும் அந்தந்த மையத்திற்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.