புல்லட் வேணுமா?.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப "இந்த" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க!
புனே: மகாராஷ்டிராவில் புனேவில் 4 கிலோ அசைவ உணவுகளை ஒரு மணி நேரத்தில் ஒருவர் மட்டும் சாப்பிட்டால் இலவசமாக ராயல் என்பீல்டு பைக்கை எடுத்துச் செல்லலாம் என ஒரு ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று உறுதியானவுடன் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கின. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்தவுடன் பல கண்டிஷன்களுடன் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்தது.
எனினும் ஹோட்டல்களுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பை காட்டிலும் குறைவாகவே உள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
ஹோட்டல்கள்
அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்களில் முன்பு போல கூட்டம் வருவதில்லை. இதனால் ஹோட்டல் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது, கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சற்று திண்டாடும் நிலை உள்ளது.
தனித்துவமான கிப்ட்
மேலும் ஹோட்டல்களும் போட்டி போட்டு கொண்டு உணவுகளை தயார் செய்து வருகின்றன. இந்த போட்டியை சமாளிக்க புனேவில் உள்ள ஒரு ஹோட்டல் புதிய யுத்தியை கையாண்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கென சிறப்பான பிளேட்டை உருவாக்கியுள்ளார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் தனித்துவமான ஒரு கிப்ட்டும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2 லட்சம் மதிப்பு
புனேவின் வடகான் மாவல் பகுதியில் உள்ளது சிவராஜ் ரெஸ்டாரன்ட். இதன் உரிமையாளர் அதுல் வைக்கர்தான் வாடிக்கையாளர்களை கவரும் திட்டங்களை வகுத்துள்ளார். அதுலின் ஹோட்டலில் தயாரிக்கப்படும் சிறப்பான அசைவ உணவை சாப்பிட்டால் போதும் 2 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
12 விதமான உணவுகள்
அந்த சிறப்பு அசைவ சாப்பாட்டின் விலை 2500 ரூபாய் ஆகும். இதில் 12 விதமான மட்டன் மற்றும் மீன் வகைகள் இருக்கும். இந்த பிளேட்டின் எடை 4 கிலோவாக இருக்கும். இந்த உணவை யார் 60 நிமிடங்கள், அதாவது ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு பைக் பரிசு உண்டு. இந்த ஆஃபர் குறித்த தகவல்கள் மெனு கார்டில் அச்சிடப்பட்டுள்ளன.
பரிசு
ரெஸ்டாரன்ட் வாயிலில் 5 புல்லட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இந்தப் போட்டியில் வென்றுள்ளாராம். அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரை சேர்ந்த சோம்நாத் பவார். தனியொரு ஆளாக மொத்தத்தையும் சாப்பிட்டுவிட்டு புல்லட்டை பரிசாக தட்டிச் சென்றார்.