38 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்த பெண்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் 38 வயதாகும் ஒரு பெண்ணுக்கு 17வது முறையாக பிரசவம் நடந்த சம்பவம் சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜல்காவ் தாலுகாவைச் சேர்ந்தவர் மாவோஜி. இவரது மனைவி லிங்காபாய் வயது 38. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்களுக்கு 9 மகள்கள் உள்பட 11 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்யும் லிங்காபாய் மற்றும் மாவோஜி தம்பதி தங்கள் மாவட்ட எல்லையை ஒட்டிய கர்நாடகா பகுதியில் கரும்பு தோட்ட வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் லிங்காபாய்க்கு மூன்று முறை கரு கலைந்துள்ளது. ஐந்து குழந்தைகள் பிறந்த உடன்இறந்துவிட்டன. தற்போது 20வது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.
கர்நாடகா மாநிலம் பெல்காமுக்கு சமீபத்தில் கரும்பு தோட்ட வேலைக்காக லிங்காபாய் மற்றும் மாவோஜி தம்பதி குழந்தைகளுடன் சென்று வேலை செய்திருக்கிறார்கள் இந்நிலையில் கரும்பு தோட்டத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சில மணி நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது.
38வயதாகும் லிங்காபாய் 17 முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த பெண்ணுக்கு கருத்தடை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.