ஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓயப்போகிறது என்பதால் பிரச்சாரம் இரு மாநிலங்களிலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இரு மாநிலங்களிலும் மாறி மாறி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தல் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. உலக அளவில் நான் சந்திக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களுமே, இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள். தற்போது வலிமையான மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.
நாட்டை கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்புவேன் என தேர்தலுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதன்படி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அல்லவா? ஆனால் இதற்கு முன்பு இப்படி நடவடிக்கை எடுக்க துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை. நாட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கொள்ளையடித்த ஒவ்வாரு காசையும் அவர்களிடம் சேர்க்காமல் நான் ஓயமாட்டேன்" என்றார்.