1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு
4.50 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை சீரம் நிறுவனத்திடம் இருந்து ரூ.200 விலையில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனே: சீரம் நிறுவனம் 1.10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ள நிலையில், மேலும் 4.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை சீரம் நிறுவனத்திடம் இருந்து ரூ.200 விலையில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் ரூ.231 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வாங்கப்படும் 4.50 கோடி டோஸ் மருந்துகளையும் சேர்த்தால், ரூ.1,176 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவிற்கு இந்தியாவில் ஒரு கோடியே 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதலுக்கான ஆர்டர்களை மத்திய அரசு நேற்று வழங்கியது.
புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து குளிர்பதனவசதி செய்யப்பட்ட 3 டிரக்குகளில் முதல் கோவிஷீல்ட் மருந்து லோடு ஏற்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு விமான நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டன.
இந்த மருந்துகள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதல் கட்டமாக வாங்கப்பட்ட 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகளை மத்திய அரசுக்காக ரூ.200 விலையில், ஜிஎஸ்டி ரூ.10 சேர்த்து ரூ.210 விலையில் சீரம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தையும் பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைஃப்கேர் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 4.5 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் ரூ.231 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வாங்கப்படும் 4 கோடியே 50 லட்சம் டோஸ் மருந்துகளையும் ரூ.1,176 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வாங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295
மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வெளி சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பூனாவாலா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் எங்களுக்கு சவாலானது . ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 கோடி வரை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் பூனாவாலா கூறியுள்ளார்.
இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் மருந்துகளும் 55 லட்சம் டோஸ்கள் வாங்க ஆர்டர் மத்திய அரசுத் தரப்பில் தரப்பட்டுள்ளன. இந்த 55 லட்சம் டோஸ் மருந்துகளும் ரூ.162 கோடிக்கு வாங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.