புனேவில் நூதனம்.. தபாலில் வந்த தாலி.. ஜூம் ஆப்பில் பெற்றோர், உறவினர்கள் ஆசி.. ஊரடங்கால் வினோதம்!
புனே: கேரளாவைச் சேர்ந்த கேஎம் விக்னேஸ் மற்றும் அஞ்சலி ரஞ்சித் ஜோடி கடந்த ஒரு வருடமாக திருமணத்தை இப்படி. நடத்தலாம்.. அப்படி நடத்தலாம் என்று கனவுகளோடு திட்டமிட்டு கொண்டிருந்தனர். ஆனால் திடீரென வந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு அவர்களின் கனவுகளை சிதைத்துவிட்டது.
எனினும் அந்த இளம் ஜோடி தங்கள் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த முடிவு செய்தனர். அவர்களின் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடந்தது. மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள் உள்பட உலகெங்கிலும் உள்ள அவர்களது உறவினர்கள், நண்பர்கள் 100க்கணக்கான விருந்தினர்கள் ஜூம் ஆப் வழியாக திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
புனேவில் மணமகன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் நடந்தது. திருமண சடங்குகளை மணமகனின் நண்பர்கள் குடும்பத்தினர் திருமணத்திற்கான இருவீட்டார் சார்பான சடங்குகளை செய்தார்கள்.
கேரளாவில் 'BevQ' ஆப் மூலம் மதுபான விற்பனை தொடங்கியது.. குடிமகன்களுக்கு வைக்கப்பட்ட செக்
மணமகன் விக்னேஷ்
இந்த ஜூம் திருமணத்தை நடத்தி முடித்த மணமகன் விக்னேஷ் கூறுகையில், "அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாக நடந்தது. ஒரு நிலையான இணையம் மற்றும் தொழில்நுட்பம் உலகெங்கிலும் உள்ள எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் வெர்சுவல் (மெய்நிகர்) திருமணத்தில் சேர உதவியது. இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம், ஆனால் உண்மையில் மறக்கமுடியாத ஒன்று" என்றார்.
மாங்கல்யம் பாடல்
கேரளாவின் பாரம்பரியமான வெள்ளை "முண்டு" உடன் (இடுப்பைச் சுற்றி அணிந்திருக்கும் ஆடை) மணமகள் அஞ்சலி நீல நிற பார்டர் மற்றும் தங்க ஜரிகை வேலைகளுடன் சேலை அணிந்திருந்தார். வெள்ளை நிற சட்டை அணிந்த மணமகன் விக்னேஷ் , அலைபாயுதே பட பாணியில் பூங்கொத்துகள் பரிமாறிக்கொண்டு, மாலை அணிவித்து தாலி கட்டி திருமணம் செய்தனர்.அப்போது அலைபாயுதே படத்தில் இருந்து "மாங்கல்யம் தந்துனானே" தமிழ் பாடல் ஒளிபரப்பானது.
ஜூம் ஐடியில்
இந்த ஜோடி வெர்சுவல் திருமணத்திற்கான சிறப்பு அழைப்பிதழ் அட்டையையும் வடிவமைத்து, கொண்டாட்டத்தில் உள்நுழைய ஜூம் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கி நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருந்தது. அதன் வழியாக மணமகன், மணமகளின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்த கொண்டு ஆசிர்வித்தனர்.
தள்ளிபோட விரும்பவில்லை
விக்னேஷ் மற்றும் அஞ்சலி ஜோடி, புனேவில் இருந்து, திருமணத்திற்காக கேரளாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு செல்லவிருந்தனர், ஆனால் லாக்டவுனால் போக முடியவில்லை. "லாக்டவுனின் ஆரம்ப நாட்களில், மே முதல் வாரத்திலாவது வீட்டிற்கு வர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, நாங்கள் செல்ல முடியாது என்பதை உணர ஆரம்பித்தோம், ஆனால் இன்னும் நாங்கள் திருமணத்தை ஒத்திவைக்க விரும்பவில்லை" என்று மணமகள் அஞ்சலி கூறினார்.
ஆன்லைனில் ஆறுதல்
இந்த நிகழ்வைக் காண கேரளாவிலிருந்து ஜூம் ஆப் வழியாக உள்நுழைந்த அவர்களது பெற்றோர், மாநிலத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது, தாலி மற்றும் திருமண ஆடையை ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவைத்திருந்தனர். அந்த ஆடை மற்றும் தாலியில் தான் திருமணம் நடந்தது. அருகில் இருந்து பார்க்க வேண்டிய திருமணத்தை அவர்களது பெற்றோர் ஆன்லைன் வழியாக பார்த்து ஆறுதல் படுத்திக் கொண்டனர்.