தற்கொலைக்கு முயன்ற காதலி... ஐசியுவில் தாலிகட்டி கல்யாணம் செய்த காதலன்.. தப்பி ஓட்டம்
புனே: சாதியை காரணம் காட்டி திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலனை கரம்பிடிக்க முடியாத ஏக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற காதலி சாவின் விளிம்புக்கு சென்றதால் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.
அதில் இருந்து மீண்ட அந்த பெண் மருத்துவமனையிலேயே காதலனை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அந்த காதலன் சில மணி நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சுராஜ் நலவடே என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஏழை பெண் மீனாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்துள்ளார். மீனாவும் அவரை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார்.
காதலி அதிர்ச்சி
இந்நிலையில் நலவடே தனது காதலி மீனாவிடம் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பி காதலனுடன் மகிழ்ச்சியாக இருந்த காதலிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
காதலி வேதனை
அவரது காதலன் சுராஜ் நலவடே திடீரென மீனாவை தாழ்ந்த சாதி பெண் என்று கூறி திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா தன்னை திருமணம் செய்யுமாறு மன்றாடியிருக்கிறார். ஆனால் காதலன் அதற்கு முடியாது என மறுத்துவிட்டார்.
தீவிர சிகிச்சை
இதனால் வேதனை அடைந்த மீனா, திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதனால் சாவின் விளிம்புக்கு சென்றதால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
காதலன் தப்பி ஓட்டம்
இதையடுத்து மீனாவுக்கும் அவரது காதலன் சுராஜ் நலவடேவுக்கு மருத்துவமனையிலேயே நேற்று(டிசம்பர் 5ம் தேதி) திருமணம் நடந்தது. கட்டாயப்படுத்தி சுராஜை திருமணம் செய்து வைத்தார்கள். காதலி மீனாவுக்கு தாலி கட்டிய சுராஜ், அங்கிருந்து சிறிது நேரத்திலேயே தப்பி ஓடிவிட்டார்.
பலாத்கார வழக்கு
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீசில் காதலன் மீது புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் சுராஜ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் பலாத்கார வழக்கு பதிவு செய்து சுராஜை தேடிவருகிறார்கள். மருத்துவமனையில் காதலியை திருமணம் செய்த காதலன் அடுத்த சில மணி நேரத்தில் தப்பியோடிய சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.