பரீட்சைக்கு நேரமாச்சு.. சேர்ந்து தேர்வு எழுதி சூப்பர் மார்க்கும் வாங்கிய அம்மா, மகன்
புனே: மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் அம்மாவும், மகனும் சேர்ந்து பத்தாவது வகுப்பு பரீட்சை எழுதி சூப்பராக பாஸாகி அசத்தியுள்ளனர்.
பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது பல பெற்றோர்களுக்கு குறிப்பாக அம்மாக்களுக்கு. படி படின்னு சொல்லி முதுகு வலிக்க உட்கார்ந்து சொல்லிக் கொடுத்தாலும்,, சத்தியமா நாளைக்கு படிக்கிறேம்மா நீ போய் ரெஸ்ட் எடும்மான்னு சொல்லும் குறும்புக்கார பிள்ளைகள்தான் இப்போது அதிகம்.
இப்படிப்பட்ட நிலையில் மகனுடன் சேர்ந்து ஒரு அம்மா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி சூப்பராகவும் மார்க் வாங்கி பாஸாகி அசர வைத்துள்ளார். இந்த ஆச்சரிய சம்பவம் நடந்திருப்பது மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில்தான். அந்த ஊரைச் சேர்ந்த பேபி குரவ் என்பவரும் அவரது மகன் சதானந்தும் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர்.
இருவருமே சூப்பராக தற்போது பாஸாகி அசரடித்துள்ளனர். பேபி குரவுக்கு வயசு 36, மகன் சதானந்த்துக்கு 16 வயது. பேபி படிப்பை பாதியில் விட்டவர். இந்த நிலையில் தனது அம்மாவையும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுமாறு சதானந்த் வலியுறுத்தி வந்தார். மகனின் அன்புத் தொல்லையை ஏற்ற பேபி தானும் பத்தாம் வகுப்புக்கு விண்ணப்பித்தார். மகனுடன் சேர்ந்து படித்தார். மகனுக்குச் சொல்லித் தந்து, அவரும் படித்துக் கொண்டார்.
அம்மாவும் பிள்ளையும் சேர்ந்தே தேர்வும் எழுதினர். இப்போது ரிசல்ட் வந்து விட்டது. அம்மா 64.40 சதவீத மதிப்பெண்களுடன் சூப்பராக தேர்ச்சி பெற்றுள்ளார். மகன் 73.20 சதவீத மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
கழுத்தில் கிடந்த தாலியை விற்று டிவி வாங்கிய கஸ்தூரி.. காரணத்தை கேட்டால் சும்மா அசந்து போயிடுவீங்க!
இதுகுறித்து பேபி கூறுகையில், இதை நான் நம்பவே முடியவில்லை. எனக்கு சின்ன வயசிலேயே திருமணமாகி விட்டது. எனவே படிக்க முடியவில்லை. இந்த நிலையில் எனது மகன்தான் மீண்டும் படிக்க கேட்டுக் கொண்டான். கணவரும் ஆதரவு தெரிவித்தார். எனவே மகனுடன் சேர்ந்து படித்தேன். இப்போது பாஸாகியும் விட்டேன் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
பேபியின் கணவர் பிரதீப் குரவையும் இதில் நாம் பாராட்டியாக வேண்டும். மனைவிக்கு உறுதுணையாக அவர் இருந்துள்ளார். வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு மனைவி, மகன் படிக்க நிறைய ஸ்பேஸ் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து குரவ் கூறுகையில், இருவரும் இணைந்து படித்தனர். கடுமையாக உழைத்தனர். இன்று நல்லமதிப்பெண் பெற்றுள்ளனர். இருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார் குரவ். இவர் ஒரு பத்திரிகையாளராக உள்ளூர் பத்திரிகையில் வேலை பார்த்து வருகிறாராம்.
பேபி வேலை பார்த்து வருகிறார். வேலைக்குப் போகும் இடத்திற்கு தனது புத்தகப் பையை தூக்கிக் கொண்டு போய் விடுவாராம். வேலை நேரம் போக இடை இடையே கிடைக்கும் கேப்பில் படித்து வந்திருக்கிறார். கூடவே மகனுடனும் சேர்ந்து வீட்டில் படித்துள்ளார். சமையல் வேலையையும் விடவில்லை. அதையும் பார்த்துக் கொண்டே படித்தும் இருக்கிறார்.
அடுத்து பிளஸ் டூ தேர்வு எழுதப் போறாராம். நேரடியாக பிளஸ்டூ தேர்வு எழுத வயது தகுதி இருப்பதால் டைரக்டாக 12ம் வகுப்புத் தேர்வு எழுத தயாராகி வருகிறாராம். சூப்பர் பேபிம்மா!