2 மாதம் காத்திருங்க.. இந்தியாவே எதிர்பார்க்கும் தடுப்பூசி குறித்து சீரம் சிஇஒ சூப்பர் தகவல்
புனே: இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஒ கூறும் போது, எங்கள் தடுப்பூசிகளின் சோதனைகள் மற்றும் செயல்முறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று அவர் ஊடகங்களை வலியுறுத்தினார்.
புனேவை தலைமையிடமாக கொண்ட சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பக்க விளைவுகள் உள்ளனவா என்பது குறித்த சோதனை நடந்து வருகிறது.
இந்த வாரம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் கட்டம் 2 மற்றும் 3 மருத்துவ பரிசோதனைகளை சீரம் நிறுவனம் தொடங்கியது. இதற்காக இந்த மாத தொடக்கத்தில் மருந்துக் கட்டுப்பாட்டு இந்திய ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம் சீரம் மருந்து நிறுவனம் ஒப்புதல் பெற்றிருந்தது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக நாடுகளில் இந்தியா தொடர் முதலிடம்- 24மணிநேரத்தில் 77,266 பேருக்கு தொற்று
எங்கெல்லாம் பரிசோதனை
18 முதல் 60 வயது வரையிலான 1,600 பங்கேற்பாளர்களுக்கு சீரம் மருந்து நிறுவனம் கொரோனா (கோவிட் -19) தடுப்பூசியை முயற்சித்து வருகிறது.. இந்தியாவில் 6 இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவக் கல்லூரி, மும்பையில் சேத் ஜி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் கே.இ.எம் மருத்துவமனை, பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் புனேவில் உள்ள சசூன் பொது மருத்துவமனை, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஆகியவற்றில் சோதனை நடத்தப்படுகிறது.
எவ்வளவு மருந்து
இந்தியாவில் சீரம் நிறுவனம் மருத்துவ சோதனை எப்படி நடத்த உள்ளது என்றால், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 0.5 மில்லி டோஸ் நாள் ஒன்று மற்றும் 29 நாளில் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. முதல் நாளில் இரண்டு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது, பின்னர் ஐந்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீரம் மருந்து குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த நிலையில் அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில், சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
2 மாதம் காத்திருங்கள்
"எஸ்.ஐ.ஐ - கோவிஷீல்ட் மருத்துவ பரிசோதனைகளில் நோயாளிகளைப் பற்றி வரும் இடைக்கால தரவுகளை விமர்சிப்பதை தவிர்க்குமாறு நான் ஊடகங்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். இந்த செயல்முறையை நாம் சார்புப்படுத்த வேண்டாம். இந்த செயல்முறையை மதிக்கிறோம், இரண்டு மாதங்கள் பொறுமையாக இருப்போம், தொடர்புடைய எல்லா தரவும் விரைவில் வெளியிடப்படும், "என்று பூனவல்லா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
காத்திருப்போம்
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தடுப்பூசியின் நிலை குறித்து இன்னும் இரண்டு மாதத்தில் முழுமையான தகவல் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல தொரு மாற்றம் வர இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருப்போம்.