புனேவில் துவங்கியது...ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு மருந்து...மனித பரிசோதனை!!
புனே: புனேவில் இருக்கும் வித்யாபீட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்துக்கான மனித பரிசோதனை துவங்கியது. இந்தியாவில் கோவிஷீல்ட் எனப்படும் இந்த மருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை தயாரிக்க இந்தியாவில் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மருந்தை ஆயிரம் ரூபாய்க்கு கொண்டு வர இருப்பதாக சீரம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
புனேவில் இருக்கும் பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரியில் மனித பரிசோதனைக்கு ஐந்து பேர் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இதில் இருவர் தேர்வு செய்யப்பட்டு கோவிஷீல்ட் மருந்து செலுத்தப்பட்டது. 32, 48 வயதில் இருக்கும் இருவருக்கும் கோவிஷீல்ட் செலுத்தப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா நெகடிவ் என்று வந்ததையடுத்து இந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த ஏழு நாட்களில் 25 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு கண்காணிக்கபட்டு வருவார்கள் என்று அந்த மாநில முதல்வர் டாக்டர் விஸ்வஜித் கடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 17 மையங்களில் மனித பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து ஏற்கனவே பிரிட்டனில் மனித பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு நல்ல பாதுகாப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த மருந்து இந்தியாவில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மருந்து மனித உடலில் செலுத்திய 14வது நாளில் டி செல்கள் தூண்டப்படும். 28வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். டி செல் என்பது வெள்ளை ரத்த அணுக்கள். அவை கொரோனா வைரஸ் தாக்கிய செல்களை அழித்துவிடும். நோய் எதிர்ப்பு என்பது புரோட்டீன் மூலக்கூறுகளாகும். இவை வைரஸை சமன்படுத்தும். துவக்கத்தில் செல்களை வைரஸ் பாதிக்காமல் பாதுகாக்கப்படும்.
இதெல்லாம் எங்கே போயி முடியுமோ.. விவசாயம் செய்யணுமாம்.. மதுரையில் இருந்து கைலாசத்துக்கு பறந்த லெட்டர்
நாடு முழுவதும் இந்த ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு மனித பரிசோதனைக்கு 1600 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளனர். சண்டிகரில் இருக்கும் மருத்துவ முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டெல்லி எய்ம்ஸ், புனேவில் இருக்கும் ஏபிஜெ மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் இருக்கும் ராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூரில் இருக்கும் ஜெஎஸ்எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி ஆகியவற்றில் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து மனித பரிசோதனை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் செய்யப்படவுள்ளது.