எல்லோரும் என்னை போட்டியிடச் சொல்றாங்க.. சரத் பவார்
புனே: லோக்சபா தேர்தலில் என்னை மாதா தொகுதியிலிருந்து போட்டியிடுமாறு கட்சித் தலைவர்கள் தன்னை வலியுறுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இருப்பினும் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்றும் அதேசமயம், கட்சித் தலைவர்களின் கோரிக்கை குறித்து யோசிப்பேன் என்றும் பவார் கூறியுள்ளார்.
புனேயில் கட்சி நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் பவார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது நான் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறேன். இக்கூட்டத்தில் என்னை மாதா தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர். மாதா தொகுதி எம்பியும் கேட்டுக் கொண்டார்.
நான் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. போட்டியிடும் மன நிலையிலும் இல்லை. இருப்பினும் நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பேன். அவர்களது முடிவை மதிப்பேன் என்றார் பவார்.
2009 முதல் 2014 வரை மாதா தொகுதியில்தான் எம்பியாக இருந்தார் பவார். அதன் பின்னர் இனிமேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.