கொரோனா கொடூரம்.. புனே நிலைமை எந்த ஊருக்கும் வந்துவிடவே கூடாது.. பெட்ரோல், டீசல் விற்பனையும் கட்!
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க பெட்ரோல் டீசல் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 590 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 112 பேருக்க கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா பரவி உள்ளது. மும்பையில் இன்று புதிதாக ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
ஊரடங்கு நடவடிக்கை
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் தான் மிக அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை புனேவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வீடுகளுக்கு வருகின்றனர்.
விற்பனைக்கு தடை
இந்நிலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் புனேவில் பெட்ரோல் டீசல் விற்பனையை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்ளுக்கும் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்படாது என்று புனே மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாருக்கு மட்டும் பெட்ரோல்
அதேநேரம் புனே மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அத்தியாவசிய சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என்று புனே மாவட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விற்பனையும் தற்போது புனேவில் தடுக்கப்பட்டுள்ளதால் அந்த மொத்த நகரத்தில் இருந்தும் யாருமே வீட்டை வெளியில் பயணிக்க முடியாத நிலைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனவை தடுக்க
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றுகையில் நாடு முழுவதும் இன்று முதல் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவே கூடாது என்று இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் அறிவிப்பை மீறி வீட்டை விட்டு வெளியில் வருவோர் மீது நாடு முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.