82 ஆயிரத்தை 'அபேஸ்' பண்ணிட்டாங்க... புனே பெண் கதறல்
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளம் பெண் ஒருவர் இகாமர்ஸ் இணையதளத்தால் ரூ.82,000 ஆயிரத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புனேவின் கப் பெத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், கடந்த நவம்பர் மாதம் ஆன்லைன் மூலம் 107 ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை வாங்கியுள்ளார். அந்த மோதிரம் அவரது விரலுக்கு செட் ஆகாததால் அதனை திரும்ப கொடுத்துவிட்டார்.
அதற்காக அந்த இகாமர்ஸ் இணைதளத்தின் கஸ்டமர்கேருக்கு கால் செய்துள்ளார். அவரிடம் பேசிய கஸ்டமர் கேர் அதிகாரி, இவரிடம் 107 ரூபாய் ரீபண்ட் பணத்தை திரும்ப பெறுவதற்காக, டெபிட் கார்டு குறித்து தகவலை கேட்டுள்ளார்.
பணம் அபேஸ்
அப்போது, அந்த பெண் ஏ.டி.எம் கார்டு குறித்து தகவல்களை சொன்னதுடன் ஓடிபி எண்ணையும் கூறியிருக்கிறார். அதன் பிறகு போனை வைத்த இளம்பெண்ணின் அக்கவுண்டில் இருந்து 1600 ரூபாய் டெபிட் ஆனது. இதற்கிடையே அந்த இளம் பெண் தன்னுடைய கார்டு தகவலை சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது தந்தையின் டெபிட் கார்டு மற்றும் ஓடிபி உள்ளிட்ட தகவல்களை சொல்லியிருக்கிறார்.
செல்போனுக்கு வந்த லிங்க்
இதையடுத்து அந்த பெண்ணின் தந்தையுடைய செல்போனுக்கு சந்தேகத்துக்கு உரிய லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை அவரது தந்தை கிளிக் செய்துள்ளார். அதன் பிறகு அந்த போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. அந்த மொபைலை எடுத்து ஸ்விட்ச் ஆன் செய்து அந்த பெண் பார்த்துள்ளார்.
பண மோசடி
அப்போது 20 ஆயிரம் ரூபாய் டெபிட் ஆகியிருக்கிறது. அது குறித்து அவரது தந்தையிடம் கஸ்டமர் கேர் அதிகாரி, நாளை ரீபண்ட் ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மறுநாள் காலையில் தந்தையின் அக்கவுண்டில் மீதமிருந்த 181 ரூபாய்யை சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டனர்.
3 பேர் மீது வழக்கு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பிரக்சானா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார், கஸ்டமர் கேர் அதிகாரி உள்பட 3 பேர் மீது மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் இருந்து டெல்லியில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு அவரது பணத்தை மாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது,