திடீரென எழுந்த "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷம்.. மதகலவரத்தை தூண்டியதாக ரயில்வே ஊழியர் கைது
புனே: "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என முழங்கிய ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மத கலவரத்தை தூண்டி விட முயற்சித்ததாக புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இவர்களில் புனே நகரின் லோனாவாலாவில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிலர் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது.
அந்த இடத்துக்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் உபேந்திர பஹதூர் சிங் (39) வந்திருந்தார். அவர் திடீரென, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கினார். இது அங்கு கூடியிருந்த மக்களையும் வீரமரணமடைந்தவரின் உறவினர்களையும் திடுக்கிட வைத்தது.
இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் அடிக்க பாய்ந்தனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி உபேந்திராவை கைது செய்தனர். அவரை பிப்ரவரி 18-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத கலவரத்தை தூண்டிவிட முயற்சித்த நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.