ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில்...மனித பரிசோதனை நிறுத்தம்!!
புனே: ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா கூட்டு தயாரிப்பில் வெளியான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மனித பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு இருப்பதாக புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதியளித்த பின்னர் மீண்டும் பரிசோதனை துவங்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனை நேற்று நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் இந்த மருந்து செலுத்தப்பட்ட பெண் ஒருவருக்கு முதுகு தண்டவடத்தில் வீக்கம் மற்றும் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மருந்துக்கான மனித ஆய்வு இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டுடன் இணைந்து இந்த மருந்தை கண்டுபிடித்து இருக்கும் ஆஸ்ட்ராஜெனிகா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், தனி சுயாட்சி பெற்ற கமிட்டி ஒன்று நிறுவப்பட்டு, இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாத்தியமான பாதிப்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்து இருந்தது.
பிரிட்டனிலும் ஆஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பு மருந்து ஆய்வை நிறுத்திக் கொண்டுள்ளது. இதையடுத்து, மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்காணையம் சீரம் நிறுவனத்துக்கு மனித பரிசோதனையை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து இந்தியாவிலும் பரிசோதனையை நிறுத்துவதற்கு சீரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சீரம் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது.