ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா.. பரபரக்கும் சர்ச்சை.. மறுக்கிறார் கோவில் நிர்வாகி!
புணே: சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் உத்தவ் தாக்கரேவை கண்டித்து ஷீரடி சாய்பாபா கோயிலும் நாளை முதல் காலவரையற்று மூடப்படுகிறது என அறிவித்துள்ள நிலையில் கோயில் திறந்திருக்கும் என அக்கோயிலின் மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் சாய்பாபாவுக்கு பெரிய கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மாநிலத்தின் பிரபல ஆன்மீகத் தலமாகவும் ஷீரடி மாறியுள்ளது. இந்த இடத்தில் சாய்பாபா அதிக நாட்கள் வாழ்ந்ததால் அவர் அங்கு பிறந்திருக்கலாம் என பலரால் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் சாய்பாபாவின் பிறந்த ஊர் பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரீ என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பாத்ரீயில் சாய்பாபா கோயில் அமைக்கப்படும் என கூறியிருந்ததால் ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால் நாளை முதல் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ஷீரடியில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை முதல் ஷீரடி செல்ல திட்டமிட்டுள்ளவர்களும் செய்வதறியாது விழித்துள்ளனர்.
இந்த நிலையில் ஷீரடி அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி மோகன் யாதவ் கூறுகையில் கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமை மாலை கிராம மக்களுடன் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர் என தெரிவித்தார். எனினும் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.