கொரோனா தடுப்பு மருந்து... முந்திக் கொண்ட ரஷ்யா... குவிந்து வரும் ஆர்டர்கள்!!
புனே: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு ஊசி வாங்குவதற்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என்று சுமார் 1.2 பில்லியன் டோஸ் மருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக வால் ஸ்டீரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு ஊசியை தயாரிப்பதற்கு டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவர்களது ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் டாக்டர் ரெட்டி நிறுவனம் 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை தயாரிக்கும். மேலும், இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்!!
உலக நாடுகள்
இதேபோல், பிரேசில், தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்த தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மருந்தை வாங்குவதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன் வந்திருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்து இருப்பதாக வால் ஸ்டீரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
அனுமதி
இதுவரை 1.2 பில்லியன் டோஸ் மருந்து தயாரிப்பதற்கு ஆர்டர் கிடைத்து இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை ரஷ்யா பெற்றுள்ளது.
ஆக்ஸ்போர்டு
தற்போது மூன்றாம் கட்டத்தில் இருக்கும் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி மனித பரிசோதனையை ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ரா ஜெனிகா இந்தியாவில் நேற்று துவக்கியுள்ளது. பிரிட்டனில் பெண் ஒருவருக்கு இந்த மருந்து செலுத்திய பின்னர் நரம்பு தொடர்பான பிரச்சனை எழுந்தது. இதையடுத்து இந்தியா உள்பட உலக நாடுகளில் இந்த மருந்து பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அமெரிக்கா
இந்த நிலையில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புனேவில் நேற்று மூன்றாம் கட்ட மனித பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. இத்துடன் தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கோவிஷீல்ட் மனித பரிசோதனை துவங்கியுள்ளது. ஆனால், இன்னும் அமெரிக்காவில் தொற்று நோய் தடுப்பு மையம் அனுமதி வழங்காததால் துவங்கவில்லை.
கோவாக்சின்
உலகம் முழுவதும் 182 கொரோனா தடுப்பு மருந்துகள் ஆரம்ப மற்றும் கிளினிக்கல் பரிசோதனையில் இருந்து வருகின்றன. இவற்றில் 36 கிளினிக்கல் பரிசோதனையில் உள்ளன. ஒன்பது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இந்தியாவில் எட்டு தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இதில் முக்கியமானது கோவாக்சின் ஆகும்.
நம்பிக்கை
உலகம் முழுவதும் ஆஸ்ட்ராஜெனிகா. ஆக்ஸ்போர்டு தயாரிப்பான கோவிஷீல்ட், மாடெர்னா, ஃபைசர்/பயோஎன் டெக், ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி/ க்ளாஸ்கோஸ்மித்கிளைன், நோவாக்ஸ், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, மூன்று சீனா தடுப்பு மருந்துகள் ஆகியவை தற்போது நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன.