ராகவா லாரன்ஸின் மாற்றுத்திறனாளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் சினிமா?
ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: நடிகர் ராகவா ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி வெற்றிப்பட இயக்குனராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் வெளியான இவரது காஞ்சனா 3 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
சினிமாவைத் தாண்டி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்து, நேரில் சென்று கிரகப்பிரவேசமும் செய்து கொடுத்தார்.
வைரலாகும் 'கரப்பான்பூச்சி' சவால்.. என்ன பண்றாங்க பாருங்க!
ராகவா லாரன்ஸின் உதவியாளராக இருந்து வந்தவர் பரத். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான பரத், இயக்குநர் முருகதாஸின் குழந்தை உட்பட பல திரையுலகப் பிரபலங்களின் குழந்தைகளுக்கு நடன ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு தனது வீட்டில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட பரத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. சினிமாவில் தன்னால் எதுவும் சாதிக்க இயலவில்லையே என்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பரத்தின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.