ராமநாதபுரம் அருகே பயங்கரம்.. கார் - வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலி.. 10 பேர் படுகாயம்
ராமநாதபுரம் அருகே கார்-வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காரைக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் தங்களது காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
வேன் மீது மோதல்
அப்போது அவர்களது கார் சாத்தான்குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலா வேன் மீது திடீரென மோதியது.
2 பேர் பலி
வேனும்-காரும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்ட இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் காரிலிருந்து ஒரு குழந்தை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
10-க்கும் மேற்பட்டோர் காயம்
மேலும் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் காயமடைந்த அனைவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
மீட்பு பணியின்போது, ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படுகாயமடைந்தவர்கள் யார் யார் என்ற விவரம் தெரியவில்லை. எனினும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.