நடுக்கடல் கச்சத்தீவில் திருவிழா- தமிழகத்தில் இருந்து 3,000 பக்தர்கள் படகுகளில் புறப்பட்டனர்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 3,000 தமிழக பக்தர்கள் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து படகுகளில் புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Recommended Video
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இதனை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது. இருப்பினும் ஆண்டுதோறும் கச்சத்தீவில் உள அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழகம், ஈழ தமிழர்கள் பங்கேற்று வந்தனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் யுத்தம் ஏற்பட்ட போது பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்கவில்லை. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு 3,000 பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டனர். கச்சத்தீவில் இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். அங்கேயே தங்கும் தமிழக பக்தர்கள் நாளை திருவிழா முடிவடைந்ததும் தமிழகம் திரும்புவர்.
முந்தைய காலங்களில் கச்சத்தீவு திருவிழா என்பது தமிழகம், ஈழத் தமிழர்களிடையே மண உறவுக்கான நிகழ்ச்சியாக இருந்தது. பண்டமாற்று முறையில் பொருட்கள் விற்பனை செய்யும் முறையும் நடைமுறையில் இருந்தது. தற்போது அடையாளத்துக்கான ஒரு திருவிழாவாக மட்டும் சுருங்கி நிற்கிறது.
ஈழத் தமிழர்கள் சுமார் 10,000 பேர் அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை செய்துள்ளது.