பழைய காலத்து மரகத நடராஜர் சிலை கொள்ளை முயற்சி... தடுத்து நிறுத்திய சாதுர்ய காவலாளி!
Recommended Video
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை திருட முயன்றவர்களை ஒற்றை ஆளாக தடுத்துநிறுத்தி சிலையை காப்பாற்றிய காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ராமநாதபுரம் அருகே உள்ளது திருஉத்திரகேச மங்கை கோவில். இந்தக் கோவிலில் மிகவும் பழமைவாய்ந்த மரகத நடராஜர் சிலை உள்ளது. அண்மைக் காலமாக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு மீண்டும் கோவில்களுக்கே அளிக்கப்பட்டு வருகிறது. சிலைதடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனைகளை நடத்தி சிலைகளை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருஉத்திரகேச மங்கை கோவில் சிலைகளை மர்ம கும்பல் திருட முயற்சித்துள்ளது. இந்த சிலை பல கோடி மதிப்பிலானது. கோயிலுக்குள் மர்ம நபர்களின் சத்தம் கேட்டு 62 வயது காவலாளி செல்லமுத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சிலையை எடுத்து சாக்குமூட்டையில் கட்டப் பார்த்துள்ளனர்.
காவலாளிக்கு தலையில் வெட்டு
இதனையடுத்து ஓடிச்சென்ற காவலாளி அவர்களை அடித்து விரட்ட முயன்றுள்ளார். இதில் ஏற்பட்ட கைகலப்பில் மர்ம கும்பல் செல்லமுத்து தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் அவருக்கு தலையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
உயிரை பொருட்படுத்தாத செல்லமுத்து
ரத்தம் சொட்ட சொட்ட செல்லமுத்து திருடர்களுடன் போராடியுள்ளார். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரத்தையும் அவர் அழுத்தியுள்ளார். இதனால் சத்தம் வரவே மக்கள் ஒன்றுகூடிவிடுவார்கள் என பயந்து திருடர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
சிசிடிவி காட்சிப்பதிவுகள்
தலையில் ரத்த காயத்துடன் கோவிலில் மயங்கி விழுந்து கிடந்த செல்லமுத்துவை மீட்ட ஊர்மக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளன.
மருத்துவமனையில் அனுமதி
காவலாளி செல்லமுத்து தன் வயதையும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஒற்றை ஆளாக சண்டையிட்டு பல கோடி மதிப்பிலான சிலையை மீட்டுள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்லமுத்துவின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர். சிலை திருட்டு முயற்சி தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.