ராமநாதபுரம் அருகே தேர்தலை புறக்கணித்த 7 கிராம மக்கள்.. வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்
Recommended Video
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே 7 கிராம மக்கள் தங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படாததை கண்டித்து வாக்களிப்பை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் மக்கள் பல இடங்களில் தங்களுக்கு பிடித்த கட்சிகள் மற்றும் வேட்பாளருக்கு வாக்களித்து வருகிறார்கள்.
ஆனால் அதே ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை அருகே கடம்பம், நல்ல வழியேந்தல் உள்பட 7 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மக்களவை தேர்தலை புறக்கணித்தனர்.
கடந்த 2017-2018ம் ஆண்டு பயிர்காப்பீடு இதுவரை இந்த கிராமத்தினருக்கு வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. கடந்த வாரம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாக்கு கேட்டு இந்த பகுதிக்கு வந்த போது, பயிர் காப்பீடு தேர்தலுக்கு முன்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாராம். ஆனால் இதுவரை பயிர்காப்பீடு வழங்கப்படாததால் 7 கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்தனர்.
ஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்
இதையடுத்து, கிராம மக்களை சமாதனம் செய்து வாக்களிக்க வைக்க திருவாடனை டிஎஸ்பி புகழேந்தி முயற்சி செய்தார். ஆனால் மக்கள் வாக்களிக்க உடன்படவில்லை. தங்களுக்கு முழுமையான இழப்பீடு கிடைத்தால் மட்டுமே வாக்களிப்போம் என தெரிவித்தனர். இதன் காரணமாக 7 கிராமங்களிலும் ஒன்று இரண்டு வாக்குகளுக்கு மேல் பதிவாகவில்லை. வாக்குச்சவாடிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.