Katchatheevu: இலங்கை: கச்சத்தீவில் மார்ச் 3,4-ல் புனித அந்தோணியார் திருவிழா- 8,000 பேருக்கு அனுமதி!
கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. கச்சத்தீவில் மார்ச் 3,4-ந் தேதிகளில் அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம்: இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவில் மார்ச் 3,4-ந் தேதி புனித அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் 8,000 பேரை அனுமதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. பாரம்பரியமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடித்து வந்தனர். 1974-ம் ஆண்டு திடீரென மத்திய அரசானது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. அதேநேரத்தில் கச்சத்தீவு தொடர்பான தமிழ்நாட்டு தமிழர்களின் உரிமைகள் தொடரும் எனவும் இருநாட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தை இன்று வரை மதிக்கவில்லை. கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றாலே தாக்குதல் நடத்துவது, சுட்டுப்படுகொலை செய்வது என்கிற அட்டூழியத்தை அரங்கேற்றுகிறது இலங்கை கடற்படை. மேலும் தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை அரசின் அடக்குமுறையும் நீடிக்கிறது.
இலங்கை கடற்படையால் இதுவரை சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை அரசு மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் கச்சத்தீவில் ஆண்டுதோறூம் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டு தமிழர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படை அதிகாரிகள், மீனவர் பிரதிநிதிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். நடப்பாண்டு கச்சத்தீவு திருவிழாவில் சுமார் 8,000 பேரை அனுமதிக்கலாம் என இன்றைய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதாம்.
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இலங்கைக்கு இந்தியா பெருமளவு கடனுதவி வழங்கி வருகிறது. இதனால் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் குரல் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் ஆராய்வதாக கூறப்பட்டது. தமிழ்நாடு பாஜகவினரும் கச்சத்தீவை மத்திய அரசு திரும்பப் பெறும் என உறுதியாக கூறி வந்தனர்.