தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் வலைவீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் வெங்கடேசுவரன்(வயது 21). மீன் பிடி தொழில்செய்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர் வழக்கம் போல் ஒரு பைபர் படகில் தனியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருக்கிறார்.
அப்போது அவர் படகில் நின்றவாறு வலையை நடுக்கடலில் வீசியிருக்கிறார். எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதனால் தப்பிக்க வழியின்றி மூச்சு திணறி பலியானார்.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய வெங்கடேசுவரன் நீண்டநேரமாகியும் வராததை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் கடலில் தேடினர். அப்போது அவர் சென்ற படகு மட்டும் நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு பார்த்த போது வெங்கடேசுவரன் வலையில் சிக்கி உயிரிழந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரது உடலையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வெங்கடேசுவரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் தொண்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.