வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. பீதி அடைந்த அரசு பஸ் பயணிகள்.. வீடியோ
Recommended Video
ராமநாதபுரம் : அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் செல்போனில் வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொண்டே பேருந்தை இயக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று தஞ்சைக்கு வழக்கம் போல் புறப்பட்டது. டிஎன் 63 என் 1469 என்ற பதிவெண் கொண்ட அந்த பேருந்தில் பயணிகள் சென்றனர். அந்த பேருந்தானது ராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் வழித்தடத்தில் செல்லும் பேருந்தாகும்.
அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஒரு கட்டத்தில் என்ன நினைத்தாரோ.. தெரியவில்லை.. தமது செல்போனில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத அந்த நபர் செல்போனில் வாட்ஸ் அப் பார்க்க தொடங்கினார்.
பகல் நேரத்தில் பரபரப்பான சாலையில் பேருந்தை இயக்குவதை விட்டுவிட்டு அந்த ஓட்டுநர் செல்போனை நோண்ட ஆரம்பித்தார். முழுக்க, முழுக்க அவரின் கவனம் செல்போனில் பதிந்தபடியே இருந்தது.
எவ்வளவு நேரம் அவர் அந்த செல்போனை பார்த்திருப்பார் என்று தெரியவில்லை. அதனை கவனித்த யாரோ ஒரு நபர் செல்போனில் பதிவு செய்ய... அந்த காட்சிகள் தற்போது டாப். இணையத்தில் சுற்றி சுற்றி வைரலாகி வரும் வீடியோ காட்சிகள் சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கோ அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கோ சென்றிருக்குமோ என்று தெரியவில்லை.
பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தில் நம்மை நம்பி பல பயணிகளும், அவரது குடும்பதாரும் இருக்கின்றனர் என்பதை சிறிதும் உணராமல் செல்போனில் வாட்ஸ் அப் பார்த்தது கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு... என்று கேள்வி எழுப்பியுள்ள பொதுநல ஆர்வலர்கள் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.