அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்கும் அன்வர்ராஜா... வார்த்தைக்கு வார்த்தை 'சின்னம்மா' புகழ்..!
ராமநாதபுரம்: சசிகலா குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா அளிக்கும் அனைத்து பேட்டிகளிலும் அவரை சின்னம்மா என்றே அழைக்கத் தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சசிகலாவின் விடுதலைக்கு பிறகு அரசியலில் தாக்கம் இருக்கும் என்றும் அவர் கூறி வருகிறார்.
அதிமுகவின் அவைத்தலைவர் பொறுப்புக்கு அன்வர்ராஜா பெயர் பரிசீலனை செய்யப்படும் சூழலில் அவர் சின்னம்மா புகழ்பாடி வருவது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
நிபுணர் குழுவினரின் ஆலோசனைப்படி 40% பாடத்திட்டங்கள் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்
அன்வர் ராஜா
ராமநாதபுரம் மாவட்டத்தின் அதிமுக முகமாக பார்க்கப்படுவர் அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர். காலத்து சீனியரான இவர் மனதில் தோன்றியதை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆகியோரிடம் நேரடியாக பேசக்கூடியவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசை சபிக்கும் வகையில் பேசி தேசிய தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரை தவிர யாருக்கும் கட்டுப்படாதவர்.
சின்னம்மா புராணம்
இந்நிலையில் அண்மைக்காலமாக சசிகலா புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார் அன்வர் ராஜா. அதுவும் சசிகலாவை அவரை பெயரைச் சொல்லி அழைக்காமல் சின்னம்மா என்ற அடைமொழியிட்டு அவர் விளிப்பது தான் அதிமுக தலைமையின் புருவம் உயர்த்த வைத்துள்ளது. பரமக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூட சின்னம்மா என்றே குறிப்பிட்டார் அன்வர் ராஜா.
அதிருப்தி வெளிப்பாடு?
அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்த அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல் அவர் மன வருத்தத்தில் இருந்து வருவதாகவும் இருப்பினும் அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்சிப் பணிகளில் வழக்கம் போல் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாக அமைப்பு முறையில் ஆட்சி மேலிடம் தனக்கு சிறப்பு பதவி வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகிவிட்டது.
சட்டமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சசிகலா விடுதலையாக இருப்பது அதிமுக தலைமைக்கு ஏற்கனவே தலைவலியாக உள்ள நிலையில் அன்வர் ராஜா போன்ற ஒரு சில நிர்வாகிகள் மீண்டும் சின்னம்மா புகழ் பாடத் தொடங்கியிருப்பது கூடுதல் பிரச்சனையை கொடுக்கிறது.