படுதோல்வியடைந்த அன்வர் ராஜா மகள்... டெபாசிட் இழந்த பரிதாபம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவின் மகள் டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்தார்.
மண்டபம் ஒன்றியம் 2-வது வார்டில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார் ராவியத்து ஹதவியா. இவர் அன்வர் ராஜாவின் மூத்த மகள் ஆவார்.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளரிடம் சுமார் 1,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார்.
அரியலூரில் சிறுத்தைகள் ஹேப்பி.. திருமா.வின் தம்பி மனைவி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்!
ஒன்றிய கவுன்சிலர்
அதிமுகவில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., வக்பு வாரியத் தலைவர் என சகல பதவிகளையும் அனுபவித்தவர் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர், அதிமுகவில் மூத்த, முக்கிய தலைவராக இப்போது திகழ்கிறார். இந்நிலையில் அவரது மகள் உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்தது ராமநாதபுர மாவட்ட அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
1,400 வாக்குகள்
மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக 2-வது வார்டில் போட்டியிட்ட ராவியத்துல் ஹதவியா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரிடம் 1400 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இதை எதிர்பார்க்காத அன்வர் ராஜா சொந்த மண்ணிலேயே செல்வாக்கு சரிந்ததால் கடுமையான அதிர்ச்சி ஆளானார்.
எதிரொலி
முத்தலாக் தடைக்கு அதிமுக ஆதரவு, குடியுரிமைச் சட்டத்துக்கு அதிமுக ஆதரவு, உள்ளிட்ட விவகாரங்களால் அந்தக் கட்சி மீது கோபத்தில் இருந்த இச்லாமியர்கள், இந்த தேர்தலில் அதனை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக சொந்த சமூக மக்களாலேயே அன்வர் ராஜா மகள் தோற்கடிக்கப்பட்டார்.
கடும் எதிர்ப்பு
அதிமுகவுக்கு வாக்குக்கேட்டு சென்ற போதே இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பை அன்வர் ராஜாவின் மகள் முன்பே தெரிந்துகொண்டார். அப்போதே வெற்றி கடினம் என்பது அவருக்கு தெரிந்துவிட்டதாம். ஆனால் டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைவோம் என அவர் நினைக்கவில்லையாம்.