சிறுபான்மையினர் வாக்குகளை, அதிமுக இழந்து வருகிறது.. சொல்வது, அன்வர் ராஜா
ராமநாதபுரம்: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதாகவும், எனவே, தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது என்றும், அக்கட்சியின், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியுள்ளார்.
அதிமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் அன்வர்ராஜா, அவர் இதுபற்றி கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜ்ய சபாவில் வாக்கெடுப்புக்கு இந்த சட்ட மசோதா வந்தபோது, இந்த மசோதாவை ஆதரித்து அதிமுக எம்பிக்கள், வாக்களித்தது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா 125 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 105 பேர் வாக்களித்தனர்.
அமைதி
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அதிமுக இதை எதிர்த்து கேட்காமல், காத்து வரும் அமைதி, அவர்கள் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் இருப்பதாக குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடும் மக்கள் நினைக்கிறார்கள்.
எதிர்ப்பு குரல்
முத்தலாக் சட்ட முன் வடிவு நாடாளுமன்றத்தில், கொண்டுவரப்பட்டபோது, நான் எதிர்த்து குரல் கொடுத்தேன். தற்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது.
பல மாநிலங்கள்
எனவே மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் இந்த குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டன.
அச்சம்
தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அதிமுக, மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும். அப்படி செய்து வந்தால், மக்கள் மனதில் அதிமுக நீங்கா இடம்பிடிக்கும். இதற்காக, மத்திய அரசிடம், அதிமுக தலைமை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் சிறுபான்மை மக்களின் உணர்வாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.