முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்ட முதுகுளத்தூர் தொகுதி... கைப்பற்ற கங்கணம் கட்டும் அதிமுக..!
ராமநாதபுரம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியை கைப்பற்றுவதற்கான பணிகளை கங்கணம் கட்டிக்கொண்டு செய்து வருகிறது அதிமுக.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதியை பொறுத்தவரை தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழ்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்ட தொகுதி என்பதால் தொகுதி மறுசீரமைப்பின் போது கூட முதுகுளத்தூர் தொகுதியை அப்பகுதி மக்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் கை வைக்கவிடவில்லை.
இதன் காரணமாக கடலாடி தொகுதியை நீக்கிவிட்டு அந்த தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளை முதுகுளத்தூர் எல்லைக்குள் கொண்டு வந்தது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட இந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸை சேர்ந்த மலேசியா பாண்டியன். வரும் தேர்தலிலும் மீண்டும் அவரே போட்டியிடுவார் எனக் கூறப்படும் நிலையில் தொகுதியை கைப்பற்றுவதற்கான பணிகளை படு தீவிரமாக செய்து வருகிறது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக.
கடந்த 2016-ம் ஆண்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி மீண்டும் முதுகுளத்தூரில் களமிறங்குவதற்கான திட்டத்துடன் தொகுதியை வலம் வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தொகுதிக்குட்பட்ட பெருநாழி, கமுதி, முடிமன்னார்கோட்டை, சம்பக்குளம் என பல இடங்களில் நிவாரண உதவிப்பொருட்களை வாரி வழங்கினார்.
இதுமட்டுமல்லாமல் எம்.எல்.ஏ.வாக இல்லாவிட்டாலும் கூட, கடந்த நான்கரை ஆண்டுகளாக முதுகுளத்தூர் தொகுதி பிரச்சனைகள் குறித்து ஆளுங்கட்சி மகளிரணி மாநில நிர்வாகி என்ற அடிப்படையில் உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தனக்கான இமேஜை அங்கு உயர்த்திக்கொண்டார்.
கீர்த்திகாவுக்கு அவரது கணவரும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளருமான முனியசாமி பக்கபலமாக இருப்பதால் மீண்டும் கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூரில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் இந்த தொகுதியை காங்கிரஸ் கேட்டு வரும் நிலையில் திமுக போட்டியிட வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.